நெய்வேலி என்.எல்.சி. விவகாரம்-பிரதமரை சந்திக்க அனைத்து கட்சி எம்.பி.க்கள் முடிவு
நெய்வேலி: நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி அனைத்து கட்சி எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு அளிக்க உள்ளது.
என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கிய குழு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் அக்டோபர் 10- ம் தேதி சென்னையில் தொமுசவுடன், என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொண்டதையடுத்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பணிக்குச் செல்லத் தொடங்கினர்.
ஆனால் மற்ற தொழிற்சங்கங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் என்.எல்.சி. சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்கள் சேவை தொடர்பான பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றும், சாலை மறியல் செய்யக் கூடாது என்றும் தொ.மு.ச, ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு, என்.எல்.சி. தொழிலாளர் ஒற்றுமை மையம் உள்ளிட்டத் தொழிற்சங்கங்களுக்கு இடைக் காலத் தடை விதித்துள்ளது.
இதையடுத்து என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக பிரதமரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலாளரும், அதிமுக எம்.எல்.ஏ. வுமான சின்னச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக வரும் 20-ம் தேதி அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளது என்றார்.