ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் இருவர் பலி
வேலூர்: ஏரியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் 2 பேர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த மேல்வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரின் மகள் வினிதா (13). இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
ரவிக்குமார் என்பவரின் மகள் ஷீபா (14). இவர் பெங்களூரில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
வினிதாவும், ஷீபாவும் குளிப்பதற்காக அருகில் உள்ள ஏரிக்குச் சென்றனர். அப்போது திடீரென சேற்றில் சிக்கிய அவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர்.
இவர்கள் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் வினிதா நீரில் மூழ்கி இறந்தார். ஷீபாவை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து கொண்டபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.