தமிழனத்திற்கு மத்திய அரசின் துரோகத்தால் தெற்கிலும் காஷ்மீர் உருவாகும்-வைகோ
கோவை: மத்திய அரசு தமிழினத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவதன் மூலம் தெற்கிலும் ஒரு காஷ்மீரை உருவாக்கி வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்தது.
இதனை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,
இலங்கையில் ஈழத் தமிழர்களை ஈவு இறக்கம் இன்றி கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சே. அவருக்கு 71 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் மகுடம் சூட்ட மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டது.
ஆஸ்திரேலியாவில் 10 இந்தியர்கள் தாக்கப்பட்டபோது, இந்தியா கண்டனம் தெரிவித்தது. அதற்கு ஆஸ்திரேலியா தூதரகமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பலர் கொல்லப்பட்டபோது, பாக்கிஸ்தானுடன் போருக்குத் தயார் என மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். ஆனால் தமிழகத்திலுள்ள மீனவர்களை தினமும் கொன்று குவிக்கும் சிங்கள அரசை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?
இலங்கை அதிபர் படுகொலை பாதகன் ராஜபக்சேவைக் கவுரப்படுத்த இந்திய அரசு துடிப்பது ஏன்? தமிழினத்துக்கு இதை விட மிகப்பெரிய துரோகத்தை எந்த அரசும் செய்ய முடியாது. இந்த துரோகத்துக்கு கருணாநிதியும் துணை போயிருக்கிறார்.
மத்திய அரசு தமிழினத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவதன் மூலம் தெற்கிலும் ஒரு காஷ்மீரை உருவாக்கி வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications