மதுரை கண்டனக் கூட்டம்-பிரமாண்ட ஏற்பாடுகளில் அதிமுக-2 லட்சம் மக்களுக்கு அழைப்பு
மதுரை: இதுவரை நடந்த அதிமுக கண்டனக் கூட்டங்களிலேயே பிரமாண்டமானது இதுதான் என்று கூறும் அளவுக்கு மதுரை அதிமுக கண்டனக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அக்கட்சி மிகவும் விரிவாக செய்து வருகிறது. வீடு வீடாக சென்று மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர் அதிமுகவினர். மதுரை முழுவதும் அதிமுக கொடிகள், பேனர்கள் மயமாக காட்சி அளிக்கிறது.
மதுரையில் அதிமுகவினர் இப்படி ஆதிக்கம் செலுத்தி ரொம்ப காலமாச்சுய்யா...இதுதான் மதுரை மக்கள் இப்போது பேசும் பேச்சாக உள்ளது. எங்கு பார்த்தாலும் திமுக கொடிகள், மத்திய அமைச்சர் அழகிரியின் படம் தாங்கிய, அவரது மகன் படம் தாங்கிய பேனர்களையும், பிரமாண்ட போஸ்டர்களையும் பார்த்துப் பழகிப் போய் விட்ட மக்களுக்கு அதிமுக போஸ்டர்களும், பேனர்களும் படு வித்தியாசமாக தெரிகின்றனவாம்.
அந்த அளவுக்கு பிரமாண்டமான முறையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெறப் போகும் கண்டனக் கூட்டத்திற்குத் தயாராகி வருகிறது அதிமுக.
ஜெயலலிதா தலைமையில், விலைவாசி உயர்வு, மின் தடை, முல்லைப்பெரியாறு பிரச்சினை ஆகியவற்றை கண்டித்து, மதுரையில் வருகிற 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்காக ரிங் ரோடு பாண்டி கோவில் அருகில் மஸ்தான்பட்டி என்ற இடத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
சோனியா நிகழ்ச்சி நடந்த அதே இடத்தில்
மேடை அமையும் இடம் சற்று முக்கியமானது. இதே இடத்தில்தான் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே இடத்தில் தற்போது ஜெயலலிதா தலைமையிலான பிரமாண்ட கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளையும், பிற பணிகளையும், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நைனார் நாகேந்திரன், நத்தம் விஸ்வாதன், பொள்ளாச்சி ஜெயராமன், ராஜ கண்ணப்பன் தலைமையில் அதிமுகவினர் பம்பரம் போல சுழன்று ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான முறையில், வீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டம் குறித்த விளக்க அழைப்பிதழ் கொடுத்து மக்களை அழைத்து வருகின்றனர். இதுவரை மதுரை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுத்துள்ளனராம்.
இது போக மதுரை நகரில் மாநகர் அதிமுக சார்பில் 3 ராட்சத பலூன்களை பறக்க விட்டுள்ளனர். அதிமுக போராட்டம் குறித்த விளக்கம் அதில் காணப்படுகிறது.
மேலும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று பிரசாரமும் செய்யப்படுகிறது. இது மதுரையில் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படுகிறதாம்.
பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் அதிமுகவினரே ஒரு பாதுகாப்புப் படையை அமைத்து கூட்டத்தினரை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளனராம். மேலும், ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளிக்க கமாண்டோ படை போன்ற ஒன்றையும் அதிமுக அமைத்துள்ளது.
ஜெயலலிதா 18ம்தேதி மதியம் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மேடைக்கு வந்து சேருகிறார்.
வழிநெடுகிலும் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட வரவேற்பு தரப்படுகிறதாம். கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பூரண கும்ப மரியாதை என வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுகவினருக்கு பெரும் உற்சாகம் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியால் மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட அதிமுக வட்டாரமே களிப்பில் மூழ்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications