39வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அதிமுக: ஜெயலலிதா எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
சென்னை: தமிழ் நாட்டின் முக்கிய எதிர் கட்சியான அதிமுகவை அமரர் எம்ஜிஆர் தொடங்கி இன்றோடு 38 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை கட்சியினர் மாநிலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து கோலாகலமாகக் கொண்டாடினர்.
கட்சித் தலைமையகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். பின்னர் கட்சியின் நினைவு மலரை ஜெயலலிதா வெளியிட எம்.ஜி.ஆர். பேரவையின் தலைவர் பி.ஹெச். பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
அதிமுகவில் இருந்து ஏராளமானோர் விலகி மற்ற கட்சிகளில் இணைந்தது பற்றி அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். ஆனால், தற்போது ஜெயலலிதா நடத்தி வரும் கண்டனக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில் நாளை மதுரையில் தமிழக அரசை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மதுரை கூட்டம் குறித்து ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.