கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது
திருத்துறைப்பூண்டி: கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் தட்டான்கோவில் மேலத்தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் வசந்தி (21). இவர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் மருவத்தூரைச் சேர்ந்த கபில்தேவ் (23).
இவர் வசந்தியை காதலிப்பதாகக் கூறி அடிக்கடி அவருடன் பல்வேறு இடங்களில் உல்லாசமாக சுற்றுத் திரிந்துள்ளார். இதில் வசந்தி கர்ப்பமானார்.
இந்த நிலையில் கபில்தேவிடம் வசந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியபோது அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து நியாயம் கேட்கச் சென்ற வசந்தியை கபில்தேவ், அவரது தந்தை தம்புசாமி (50), தாய் இந்திராணி (41), அண்ணன் ரவீந்திரன் (28) ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் அடைத்து வைத்து தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இது பற்றி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் வசந்தி புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
இதனையடுத்து திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது குறித்து வசந்தி மனுக் கொடுத்தார். நீதிபதி நாகராஜன் உத்தரவின்பேரில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. லட்சுமி வழக்குப் பதிவு செய்து கபில்தேவ், தம்புசாமி, இந்திராணி ஆகிய மூவரையும் கைது செய்தார்.












Click it and Unblock the Notifications