வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்யக் கோரி தேமுதிக ஆர்பாட்டம்
திருப்பூர்: மத்திய அரசு வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ஆறு மாவட்டங்களில் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த தொழிலை நம்பி 50 லட்சம் பேர் உள்ளனர்.
ஒரு கண்டி பஞ்சின் விலை ஒரே ஆண்டில் 23 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ரூ. 42 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ரூ. 140 -க்கு விற்ற ஒரு கிலோ நூல் தற்போது ரூ. 205 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் பின்னலாடை மற்றும் ஐவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ள 70 சதவிகித சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உற்பத்தியாகும் பஞ்சை அப்படியே ஏற்றுமதி செய்யாமல் அதை நூலாக்கி பின்னர் ஆடையாக்கி மதிப்பை கூட்டுவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.
இத்தொழிலை சீராக நடத்த மாதத்திற்கு 22 லட்சம் பேல்கள் என்ற வீதம் டிசம்பர் வரை 55 லட்சம் பேல்கள் கையிருப்பு இருக்க வேண்டும்.
ஆனால் உள்நாட்டுத் தேவைக்கே பஞ்சு கிடைக்காத நிலையில், வெளிநாடுகளுக்கு நவம்பர் முதல் தேதியில் இருந்து 55 லட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக உலகச் சந்தையில் இந்தியாவுடன் கடும் போட்டியிடும் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு வெளிநாடுகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்யக் கோரி திருப்பூரில் தேமுதிக சார்பில் எனது தலைமையில் வரும் 22-ம் தேதி மாநகராட்சி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.