அதிகரிக்கும் இலங்கை கடற்படை அட்டூழியம் : கவலையில் தமிழக மீனவர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் விசைப் படகு துறை முகங்கள் உள்ளன. இந்தப் பகுதி மீனவர்கள் இந்தத் துறைமுகங்களில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்தத் தொழிலை நம்பி 3 ஆயிரம் தொழிலாளர்களும், 500க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளும் உள்ளனர்.
இவர்கள் இந்திய- இலங்கை எல்லையில் தான் மீன் பிடிக்கின்றனர். ஏற்கனவே தமிழக மீனவர்களுக்கு பல இன்னல்களைத் தரும் இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வருவதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவர்களை விரட்டுகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் இதுவரை சென்ற 800 விசைப் படகுகளுக்கு பதில் தற்போது 200 படகுகள் தான் மீன் பிடிக்கச் செல்கின்றன. மீதமுள்ள 600 விசைப்படகுகள் துறைமுகங்களிலேயே நிற்கின்றன. இதனால் மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசைப் படகு உரிமையாளர் சண்முகம் கூறியதாவது,
காலகாலமாக நாங்கள் மீன்பிடித் தொழிலை செய்து வருகிறோம். இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள்ளேயே வந்து தமிழக மீனவர்களை தாக்குகின்றனர். படகுகளில் இருக்கும் வலைகள், தளவாடப் பொருள்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி கடலில் எறிந்து விடுகின்றனர். இதனாலேயே மீனவர்கள் கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.
இலங்கை மீனவர்கள் குழு தமிழகத்திற்கு வந்து சென்ற பிறகு இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து நாங்களும் 2 மாதத்திற்கு ஒரு முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாகவே இருக்கின்றன. இனியாவது இந்த பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.