சுரேஷ் கல்மாடி - ஷீலா தீக்ஷித் மோதல்: அம்பலமாகும் பல கோடி ரூபாய் ஊழல்!
காமன்வெல்த் போட்டிகளுக்கான மைதானங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இதுவரை ரூ 600 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என தோராய மதிப்பீடுகளி்ல் தெரியவந்தது. இந்தத் தொகை இன்னும் கூட அதிகமாக இருக்கலாம் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
காமன்வெல்த் போட்டிகளுக்காக ரூ 70 ஆயிரம் கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளில் வரலாறு காணாத அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. ஒரே பணிக்கு இருமுறை பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உள்பட பல ஆயிரம் கோடிக்கு மோசடி நடந்துள்ளது. இந்த ஊழல்களை முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி சங்லுவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் இருந்து, காமன்வெல்த் ஊழல் தொடர்பாக பெறப்பட்ட சில தகவல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. மைதானம் கட்டும் பணிகளில் மட்டும் ரூ 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
நடக்காத ஒரு பணிக்கு ரூ 200 கோடி செலவழிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணிகளில் செலவிட்ட தொகை ஒன்றாகவும் கணக்கு காட்டப்படும் தொகை வேறாகவும் உள்ளது.
இதற்கிடையே டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சுரேஷ் கலமாடி கூறியிருப்பது அதிர வைத்துள்ளது. தனது வசம் ரூ 1,620 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் ஷீலா தீக்ஷித் வசம் ஒதுக்கப்பட்ட ரூ 16000 கோடியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாவும் கல்மாடி தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்தையுமே கவனத்தில் எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன. விசாரணை நேர்மையாக நடக்கும்பட்சத்தில் பல ஆயிரம் கோடி மோசடி அம்பலமாகும் எனத் தெரிகிறது.