90 சதவீத மக்கள் வீடு திரும்பிவிட்டனர்! - இலங்கை அமைச்சர்
புதுச்சேரி: போரின்போது இடம்பெயர்ந்த 90 சதவீத தமிழர்கள் நிவாரண முகாம்களில் இருந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர் என இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் செந்தில் தொண்டமான் புதுவை முதல்வர் வைத்திலிங்கத்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக இந்தியா நிதி உதவி அளித்துள்ளதாகவும், தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதை அறிய விரும்பியதற்காக வைத்திலிங்கத்திற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் தொண்டமான் குறிப்பிட்டார்.
வைத்திலிங்கத்தை முன்னதாகவே சந்திக்க விரும்பியதாகவும் எனினும் அப்போது அவர் உடல்நலமில்லாமல் இருந்ததால் இப்போது சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தொண்டமான் தெரிவித்தார்.