தலைப்பாகைப் பிரச்சினை: பொற்கோயிலுக்குச் செல்லமாட்டார் ஒபாமா!!
ஒபாமா, நவம்பர் 6-ம் தேதி மும்பை வருகிறார். அங்கு ஒருநாள் தங்கிய பின்னர் தில்லிக்கு செல்கிறார். முன்னதாக மும்பையில் இருந்து பொற்கோயிலைப் பார்வையிடுவதற்காக அமிர்தசரஸுக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருடைய பயணத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக அவர் அங்கு செல்லமாட்டார் எனத் தெரிகிறது.
ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை அதிகாரிகள் குழு கடந்த மாதம் இந்தியா வந்தது. ஒபாமா பொற்கோயிலுக்குச் செல்லும்போது பாரம்பரிய தலைப்பாகை அணிய வேண்டும் என்பதை அக்குழு அப்போது நிராகரித்துவிட்டது. முஸ்லிமைப் போன்று தோற்றம் அளிக்கும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என அக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.
பயணத்திட்ட மாறுதலுக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த மாற்றம் குறித்து அமெரிக்கா தரப்பில் இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும் உரிய நேரத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.