பெங்களூர் இன்போசிஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை 9 மணிக்கு பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள இன்போசிஸ் அலுவலக வளாகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், அலுவலக வளாகத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அது வெடிக்கும் என்று கூறி விட்டு போனைத் துண்டித்தார்.
இதையடுகத்து தொலைபேசி அழைப்பை அட்டென்ட் செய்த வரவேற்பாளர் ராகேஷ் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். நல்ல ஆங்கிலத்தில் அந்த நபர் பேசியதாகவும் கூறினார்.
இதையடுத்து வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்கள், மோப்ப நாய்கள் சகிதம் போலீஸார் விரைந்து வந்தனர். அலுவலக வளாகம் முழுவதையும் தீவிரமாக சோதனையிட்டனர். இன்போசிஸ் அலுவலக வளாகத்தில் உள்ள 80 கட்டடங்களையும் அலசி ஆராய்ந்தனர்.
தீவிர சோதனையில் எந்த குண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டுத் தகவல் புரளி என்று தெரிய வந்தது.
வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் அலுவலக ஊழியர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. தெரிந்தால் பீதியாகி விடும் என்பதால் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் சோதனை நடந்தபோது இது வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஊழியர்கள் நினைத்தனர்.
மேலும் சோதனையின்போது எந்த ஊழியரும் வெளியேற்றப்படவில்லை. ஒருபக்கம் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில் மறுபக்கம் சோதனையும் நடந்தது.
இதற்கிடையே, இந்த தொலைபேசி அழைப்பு ஜே.பி.நகரில் உள்ள ஒரு பிசிஓவிலிருந்து வந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அந்த தொலைபேசி பூத் காந்தராஜ் என்பவருக்குச் சொந்தமானதாகும். அவரிடம் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசி செய்யப்பட்ட நேரத்தில் அவர் வேறு வேலையில் பிசியாக இருந்ததால் யார் வந்து பேசியது என்பது குறித்துத் தனக்குத் தெரியவில்லை என்று காந்தராஜ் கூறியுள்ளார்.
சமீபத்தில் பெங்களூர் கமிஷனர் அலுவலகத்திற்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போது ஆணையர் சங்கர் பிதரி அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்து தனது அறையிலேயே இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications