அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை ஜனவரியில் திறக்கிறார் பிரதமர்-ஸ்டாலின்
டெல்லி: சென்னை அடையாறில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்காவை வருகிற ஜனவரி மாதம் திறந்து வைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அவருடன் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அப்போது, அடையாறில் 358 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைக்க வர வேண்டும் என்று பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தனது மகன் துரை தயாநிதியின் திருமண அழைப்பிதழை மு.க.அழகிரி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
சென்னை அடையாறில் 358 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் பூங்காவை தமிழக அரசு அமைத்து வருகிறது. ஜனவரி மாதம் நடைபெறும் இதன் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் சார்பில் பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜனவரி மாதம் சென்னை வருவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்றார் ஸ்டாலின்.