நெல்லை போக்குவரத்து கோட்டம் நாளை உதயம்: நேரு துவக்கி வைக்கிறார்
நெல்லை: நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படப் போகும் புதிய போக்குவரத்து கழகத்தின் தொடக்க விழா நாளை நடக்கிறது.
நெல்லை அரசு போக்குவரத்து கழக கோட்டம், புதிய பேருந்துகள் மற்றும் புதிய வழித்தடங்கள் தொடக்க விழா நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நாளை காலை 10.45 மணிக்கு நடக்கிறது.
விழாவிற்கு தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகிக்கிறார். போக்குவரத்து துறை அமைச்சர் நேரு புதிய போக்குவரத்து கழக கோட்டம் மற்றும் புதிய வழிதடங்களில் பேருந்துகளை இயக்கி வைத்து பேசுகிறார்.
நெல்லை மேயர் சுப்பிரமணியன், எம்.பி.க்கள் தங்கவேலு, ராமசுப்பு, மனோஜ் பாண்டியன், கலெக்டர் ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் கருப்பசாமி பாண்டியன், மலைராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
விழாவில் அமைச்சர்கள் சுரேஷ்ராஜன், மைதீன்கான், பூங்கோதை, கீதா ஜீவன், எம்.பி.க்கள் லிங்கம், ஜெயதுரை, ஹெலன் டேவிட்சன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா வரவேற்கிறார். இறுதியில் அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் ராஜேந்திரன் நன்றி கூறுகிறார்.
மாலை 4 மணிக்கு அம்பை கலைக் கல்லூரி அருகில் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் நடக்கும் விழாவில் புதிய இயக்க ஊர்தி ஆய்வாளர் பகுதி அலுவலகத்தை அமைச்சர் நேரு துவக்கி வைக்கிறார்.
இதை தொடர்ந்து தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் தென்காசி போக்குவரத்து அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, புதிய வழித்தடங்களை அமைச்சர் நேரு துவக்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications