காங். எம்.பி. குறை கூறி பேச்சு-கண்டித்த சபாநாயகர்-நெல்லையில் பரபரப்பு
நெல்லை: நெல்லையில் நடந்த புதிய போக்குவரத்துக் கோட்ட தொடக்க விழாவின்போது தமிழகத்தில் அறிவிக்கப்படாத பஸ் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி குற்றம் சாட்டினார். அப்படி பேசக் கூடாது என்று கூறி அவரை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று நெல்லையில் புதிய போக்குவரத்துக் கோட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் ஆவுடையப்பன், போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் மைதீன் கான், கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, காங்கிரஸ் எம்.பி. ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் எம்.பி. ராமசுப்பு பேசுகையில், அரசு பேருந்துகளில் அறிவிக்கடாமல் கட்டணங்கள் உயருகிறது. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பல விதமாக பேருந்துகளை பிரித்துள்ளீர்கள். பேருந்து எங்கே நிற்கின்றது. எந்த பேருந்துக்கு எவ்வளவு கட்டணம் என்பது மக்களுக்கு புரியவில்லை. இந்த குழப்பதை போக்குவரத்துறை அமைச்சர் தவிர்க்க வேண்டும் என்றார்.
பின்னர் பேச வந்த சபாநாயகர் ஆவுடையப்பன், ராமசுப்புவைக் கண்டிப்பது போலப் பேசினார். அவர் பேசுகையில், பொறுமையை சோதிக்கும் அளவுக்கு பேச்சுக்கள் இருக்கக் கூடாது. கோரிக்கை வைக்கும் இடம் இதுவல்ல. கோரிக்கை வைப்பதற்காக அசம்பிளி இருக்கின்றது. அங்கே நீங்கள் கோரிக்கையை எழுப்புங்கள். அமைச்சர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள். எனவே இனி இந்த மேடையில் பேச வரும் நண்பர்கள் வாழ்த்தி பேசுங்கள் என்றார்.
காங்கிரஸ் எம்.பி. குறை கூறி பேசியதும், அதைக் கண்டித்து சபாநாயகர் பேசியதும் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.