8 கிலோ நகைக் கொள்ளை-துப்புக் கொடுப்போருக்கு ரூ. 3 லட்சம் பரிசு
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பஸ்சை வழிமறித்து சென்னை நகைக் கடை ஊழியர்களிடம் 8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காந்திலால்,சசன்சிங், மகேந்திரசிங், சென்னையில் உள்ள நகை கடை ஓன்றில் வேலை செய்யும் இவர்கள் மூவரும் கடந்த மாதம் 28ம் தேதி தூத்துக்குடி பகுதியி்ல் உள்ள கடைகளில் ஆர்டர் எடுக்க வந்தனர். பின்னர் இங்கிருந்து 8 கிலோ நகைகளுடன் மதுரை பஸ்சில் சென்றனர்.
எட்டயபுரம் தாண்டி வெம்பூர் அருகே பஸ் சென்றபோது திடீரென ஒரு கார் குறுக்கே பாய்ந்து பஸ்சை வழிமறித்தது. அதில் இருந்து இறங்கிய 5 பேர் பஸ்சில் ஏறி காந்திலால், சசன்சிங், மகேநதிர சிங் ஆகியோரிடம் இருந்து 8 கிலோ நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க தூத்துக்குடி எஸ்பி கபில்குமார் சரத்கார் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஆனாலும் இதுவரை கொள்ளையர்கள் பற்றி எவ்வித துப்பும் துலக்கவில்லை. கார் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது அது போலி எண் என்றும் மோட்டார் சைக்களுக்கு உரியது எனவும் தெரிய வந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.