காதல் விவகாரம்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை
பழனி: மூத்த மகள் வீட்டை விட்டுவெளியேறி தான் காதலித்தவரை மணந்து கொண்டதால் வேதனை அடைந்த பழனியைச் சேர்ந்த பூண்டு வியாபாரி தனது மனைவி, மகன், இளைய மகளுடன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய் அனாதையாகி விடக் கூடாது என்பதற்காக அதையும் விஷம் வைத்துக் கொன்று விட்டனர்.
பழனி திருநகர் பகுதியில் வசித்து வந்தவர் 50 வயதான கோதண்டபாணி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு ஸ்ரீதேவி (27), ஷாலினி (20), பாண்டி (23) என்ற குழந்தைகள் உள்ளனர்.
ஸ்ரீதேவி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஷாலினி பழனியில் ஒரு தனியார் பள்ளில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பாண்டி மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.
ஸ்ரீதேவிக்கும், மாரியப்பன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில், தனது வீட்டை விட்டு வெளியேறி காதலருடன் போய் விட்டார் ஸ்ரீதேவி.
இதனால் கோதண்டபாணி குடும்பத்தினர் பெரும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். மனம் உடைந்த கோதண்டபாணி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதை குடும்பத்தினரிடமும் கூறினார்.
பின்னர் இரவு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்தனர். அதை அனைவரும் சாப்பிட்டனர். அந்த சாப்பாட்டை தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கும் அளித்தனர். பின்னர் தனது மைத்துனர் மருதுப் பிள்ளைக்குப் போன் செய்த தண்டபாணி, உனது தங்கை கிருஷ்ணவேணிக்கு உடல் நிலை சரியில்லை. உடனே வா என்று கூறியுள்ளார் கோதண்டபாணி.
இதைக் கேட்டதும் விரைந்து வந்தார் மருதுப் பிள்ளை. நேற்று காலை வீட்டுக்கு வந்து சேர்ந்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது தங்கை, தங்கை கணவர், அவர்களது இரு பிள்ளைகள், செல்ல நாய் ஆகிய அனைவரும் வாயில் நுரைதள்ளியபடி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து பதறித் துடித்தார் மருதுப் பிள்ளை.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து பிணங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பு கோதண்டபாணி கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அதில் தனது மகள் காதல் விவகாரத்தை விளக்கியும், இதற்குக் காரணமாக இருந்தவர்களது பெயர்களைக் குறிப்பிட்டும், இந்தக் காரணத்திற்காகவே தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார் கோதண்டபாணி.
செல்ல நாயோடு சேருந்து குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.