ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியைக் கொலை செய்தவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக கட்டிய மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (30). இவரது மனைவி உமா. எம்.ஏ படித்தவர். 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தத் தம்பதிக்கு 4 வயதில் ஹரிஷ்மா என்ற மகளும், 2 வயதில் சூரியப்பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 21-ந் தேதி வடக்கு இனமான்குளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு மனைவி உமாவுடன் செந்தில் குமார் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். இரவில் அங்கு இருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்கள். 9 மணி அளவில் நொச்சிகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீர் என்று 3 மர்ம ஆசாமிகள் அவர்களை வழிமறித்தனர். ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.
பயத்தில் பதறிப்போன உமா மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்கினார். உடனே அவர்களில் 2 பேர் செந்தில் குமாரை மடக்கிப் பிடித்துக் கொண்டனர். மற்றொருவன் கத்தியால் உமாவின் கழுத்தில் குத்தி விட்டு நகைகளை பறித்தான் அதன் பிறகு அவர்கள் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
கத்திக் குத்துப்பட்ட உமாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. உமாவைத் தாக்கியவர்கள் செந்தில்குமார் ஏவிய கூலிப்படையினர் என்ற அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது. இதையடுத்து செந்தில்குமாரைப் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரிடம் அவர் கூறுகையில்,
முன்பு நான் எல்.ஐ.சி. ஏஜெண்டாக வேலை செய்தேன். அப்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் வாடிக்கையாளர்களின் எல்.ஐ.சி. பணத்தை கையாடல் செய்தேன். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கையாடல் செய்த தொகையை திருப்பிக் கொடுத்தேன்.
இதனால் சமீப காலமாக எனக்கு அதிக பண நெருக்கடி ஏற்பட்டது. என் மனைவி உமா பெயரில் ரூ.20 லட்சத்துக்கு எல்.ஐ.சி. பாலிசி எடுத்தது நினைவுக்கு வந்தது. பாலிசி பணத்துக்கு ஆசைப்பட்டு அவளை கொலை செய்ய முடிவு செய்தேன்.
நான் வகுத்த திட்டப்படி கூலிப்படையினர் எனது மோட்டார் சைக்கிளை வழிமறித்து மனைவியை கொலை செய்தனர் என்றுகூறியுள்ளார் செந்தில்குமார்.
இந்தக் கொலையில் செந்தில்குமாரின் தந்தைக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். செந்தில்குமாரை விட உமா 3 வயது மூத்தவராம். இதனால் அவரை மருமகளாகவே ஏற்றுக் கொள்ளவில்லையாம் செந்திலின் தந்தை ராமகிருஷ்ணன். அவரது வீட்டிலிருந்து உமாவின் தாலியைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். ராமகிருஷ்ணனையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.