இலங்கையைக் காக்க இந்திய ஒருமைப்பாட்டை காவு கொடுத்த காங். அரசு-வைகோ
சென்னை: இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கிறோம் என்று கூறி இந்தியாவின் ஒருமைப்பாட்டை காவு கொடுத்து விட்டது இந்திய அரசு என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில், கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய தமிழ் எங்கள் உயிரிலும் மேலாகும் என்ற பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,
இந்திராகாந்தி இருக்கும் வரை ஈழத் தமிழர்களுக்கு உதவினார். ஈழ யுத்தத்திற்கு களம் அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். ஆவார். தேவையான பண உதவிகளை செய்தார். ஆனால், இப்போதைய அரசு செய்த துரோகத்திற்கு எல்லாம் பெரும் துரோகமாக, காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்து வந்தனர்.
இலங்கை ஒருமைப்பாட்டை காப்பதற்காக இந்திய ஒருமைப்பாட்டை காவு கொடுத்திருக்கிறார்கள். இந்த பூமிப் பந்தில் எங்கோ ஓர் இடத்தில் பிரபாகரன் இருக்கிறார். நாம் வாழும் காலத்திலேயே தமிழ் ஈழத்தை அவர் படைப்பார்.
உலகில் 50 புதிய நாடுகள் உருவாகியுள்ளன. அப்படி இருக்கும்போது, ஏன் தமிழ் ஈழம் உருவாக கூடாதா?. தமிழ் ஈழம் மலர்வது உறுதி. தமிழ் ஈழ விடுதலை போராட்டம் மீண்டும் எழுச்சி பெறும் என்றார் வைகோ.
நெடுமாறன் பேசுகையில்,
இந்த பாடல்கள் ஈழத்தில் களத்தில் நிற்கும் போராளிக்கும், ஈழ மக்களுக்கும் எழுச்சி ஊட்டும். கவிஞர் காசி ஆனந்தனின் குடும்பம் ஈழத் தமிழர்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம். இந்த சி.டி. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications