தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்கு 170 சிறப்பு பஸ்கள் இயக்கும் நெல்லை கோட்டம்
நெல்லை: புதிதாக உதயமான நெல்லை அரசு போக்குவரத்துக் கழக கோட்டத்தில் இருந்து தீபாவளியை முன்னிட்டு சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு 170 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சேர்நதவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு வருவதற்கு ரயில், பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வி்ட்டனர்.
இருப்பினும் ஏராளமானவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக உதயமான நெல்லை கோட்டத்தில் இருந்து 170 சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து நவம்பர் மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் விடிய விடிய தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும். இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் சிரமமின்றி பயணத்தை தொடர முடியும். நெல்லை மண்டலத்தில் இருந்து 100 பேருந்துகளும், நாகர்கோவில் மண்டலத்திலிருந்து 70 பேருந்துகளும் சிறப்பு பேருந்துளாக இயக்கப்படுகின்றன.
நெல்லை மண்டலத்தில் இருந்து சென்னை-நெல்லைக்கு 25 பேருந்துகளும், சென்னை-கோவை, சென்னை-திருச்சிக்கு 10 பேருந்துகளும், சென்னை-திருப்பூருக்கு 15 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதே போல சென்னை-தூத்துக்குடிக்கு 20 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர பயணிகள் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் நெல்லை கோட்டம் தயார் நிலையில் உள்ளது.
வெளியூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு வருபவர்கள் சொந்த ஊருக்கு செல்ல எந்நேரமும் வசதியாக நகர, புறநகர பேருந்து சேவை நவம்பர் மாதம் 4-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
இதற்காக நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் தற்காலிகமாக சிறப்பு பயணிகள் சேவை அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications