தமிழக கடலோரப் பகுதிகளில் மழை-வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்
சென்னை: வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிளில் நேற்று மழை பெய்தது.
அக்டோபர் மத்தியில், வட கிழக்குப் பருவ மழை தொடங்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அது சற்று தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் விரைவில் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அது உண்மைதானோ என்று நினைக்கும் வகையில் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,
தமிழ் நாட்டுக்கு பெய்யக்கூடிய மழை அளவில் பெரும்பான்மையான மழையை கொடுப்பது வடகிழக்கு பருவமழை. இது அக்டோபர் 20 அல்லது அதற்கு ஒரு வாரத்திற்கு முன்போ ஒருவாரத்திற்கு பிந்தியோ தொடங்குவது வழக்கம். எப்போதாவதுதான் நவம்பர் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்னும் தென்மேற்கு பருவமழை முடியவில்லை. தென்மேற்கு பருவமழை முடிந்ததும்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக தற்போது வீசக்கூடிய நிலக்காற்று மாறி கடல் காற்று நிலத்திற்குள் வீசும். இது கீழைக்காற்று என்று அழைக்கப்படும்.
இந்த கீழைக்காற்று வீசத்தொடங்கினால்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அர்த்தம். அந்த கீழைக்காற்று இன்னும் 48 மணி நேரத்திற்குள் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யவேண்டும். அப்போதுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக முறைப்படி அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் 29-ந் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி மகாபலிபுரம், புதுச்சேரி விமான நிலையத்திலும் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையிலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.
பின்னர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வங்கக் கடலின் மத்திய மேற்கு பகுதியிலும் அதை சுற்றி சுமார் 2 கி.மீட்டர் தூரத்திலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையைப் பொறுத்தவரை நகர்ப் பகுதிகளில் பல இடங்களில் நல்ல மழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் காணப்பட்டது. புறநகர்ப் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்தது.
இன்றும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்றும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications