5 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவதாக வதந்தி-காத்திருந்து ஏமாந்த பாஜக தலைவர்கள்

கர்நாடக பாஜக நிலைமை பெரும் காமெடியாகியுள்ளது. ஆட்சி இப்போதோ, அப்போதோ என்று இழுத்துக் கொண்டிருக்கிறது. யாராவது ஒரு எம்.எல்.ஏ கட்சிக்கு வருவதாகவோ அல்லது எதிர்க்கட்சியிலிருந்து விலகுவதாக தகவல் வந்தால் பெரும் களிப்பாகி விடுகிறது பாஜக முகாம். இதனால் கட்சித் தலைமை அலுவலகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதியபடி உள்ளது.
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேரில் ஐந்து பேர் மீண்டும் கட்சிக்குத் திரும்பத் தயாராகி விட்டதாகவும், அதுகுறித்துப் பேச அவர்கள் கட்சி அலுவலகத்திற்கு வருவதாகவும் பாஜக தலைமையகத்திற்கு ஒரு தகவல் வந்தது. இதனால் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகம் பெரும் குஷியடைந்தது.
மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பா முதல் ஆளாக வந்து விட்டார். மற்றவர்களும் வந்து காத்திருந்தனர். பத்திரிக்கையாளர்களுக்கும் தகவல் கொடுத்து விட்டார் ஈஸ்வரப்பா. பாஜக மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பாவைப் பார்க்க அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வரப் போவதாக தங்களுக்கும் செய்தி வந்துள்ளதாக அங்கு கூடிய பத்திரிக்கையாளர்களும் கூறவே, பாஜக வட்டாரம் மேலும் குஷியானது.
இந்த நிகழ்ச்சியின்போது ரெட்டி சகோதரர்களில் ஒருவரான அமைச்சர் ஜனார்த்தனன் ரெட்டி உடன் இருப்பார் என மீடியாக்காரர்களுக்கு எஸ்.எம்.எஸ். வேறு வந்து சேர்ந்தது. சரிதான், ரெட்டி கெட்டியாகத்தான் வேலை செய்திருக்கிறார் போல என அனைவரும் நினைத்தனர்.
சங்கரலிங்கே கெளடா, சர்வபோமா பாகலி, நஞ்சுண்டசாமி, பெல்லுபி, மனப்பா வஜ்ஜல் ஆகியோர்தான் நேற்று வருவதாக கூறப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.
இப்படி அத்தனை பேரும் வருவார்கள், வருவார்கள் என அதிருப்தி எம்.எல்.ஏக்களை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்த நிலையில் ஒரு ஈ, காக்கா கூட அந்தப் பக்கம் வருவதாகத் தெரியவில்லை. ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் வருவதாக கூறப்பட்டிருந்த ஜனார்த்தனன் ரெட்டி கூடவரவில்லை. ஆனால் ரெட்டியின் மீடியா செயலாளர் என்ற பெயரில் ஒரு எஸ்.எம்.எஸ். மட்டும் பத்திரிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வந்தது. அதாவது, அமைச்சர் வந்து கொண்டிருக்கிறார், எப்போது வேண்டுமானாலும் வந்து விடுவார் என்று அது கூறியது.
ஆனால் ரொட்டி விற்பவர் கூட அந்தப் பக்கமாக வரவில்லை. இதனால் பத்திரிக்கையாளர்களுக்கு சந்தேகம் வந்து விட்டது. பிறகுதான் தெரிந்தது இது வதந்தி என்று. கடுப்பான செய்தியாளர்கள் முதல்வர் எதியூரப்பாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோதுதான் அவருக்கும் இப்படி ஒரு வதந்தி பரப்பப்பட்டது தெரிய வந்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பாவைப் போனில் பிடித்து, உலுக்கி எடுத்து விட்டார். ஈஸ்வரப்பாவிடம் முதல்வர் கூறுகையில், நமக்கு எதிராக சிறிய அளவிலும், பெரிய அளவிலும் சதிகள் நடந்து வருவது உங்களுக்குத் தெரியாதா. கட்சித் தலைமை அலுவலகத்தில் அத்தனை பத்திரிக்கையாளர்கள் குவிந்த நிலையில் உண்மை என்ன என்று விசாரித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா. இப்படியா கட்சிக்குப் பெயர் கெடும் அளவுக்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது.
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் நிலை உள்ளது. இந்தநேரத்தில் யாருடைய மன்னிப்பும், மறு வருகையும் நமக்குத் தேவையில்லை. அப்படி இருக்கையில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரப்பப்பட்ட வதந்தி குறித்து உஷாராக இருந்திருக்க வேண்டாமா. இதுபோல இனியும் நடக்காதீர்கள் என்று வறுத்தெடுத்து விட்டார்.
அத்தோடு நில்லாமல் பாஜக தலைவர் நிதின் கத்காரியைத் தொடர்பு கொண்ட எதியூரப்பா, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் உங்களுடன் பேசியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி ஏதும் நடந்ததா என்று கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார்.
பின்னர் கத்காரி பெயரைப் பயன்படுத்தி யாரோ சிலர் வேண்டும் என்றே இவ்வாறு செய்துள்ளனர். கட்சிப் பெயரைக் கெடுக்கும் முயற்சியே இது. இதை யாரும் நம்ப வேண்டாம். எந்த தகவலாக இருந்தாலும் முதலில் நாம் உறுதிப்படுத்திக் கொண்டு பிறகுதான் பத்திரிக்கையாளர்களை அழைக்க வேண்டும் என ஈஸ்வரப்பா உள்ளிட்டோரிடம் கண்டிப்பாக கூறினார் எதியூரப்பா.
எதியூரப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஈஸ்வரப்பா பெரும் அப்செட்டாகி விட்டாராம். ஏமாற்றி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் செல்போனையும் ஆப் செய்து வைத்து விட்டார்.












Click it and Unblock the Notifications