தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை-அரசு

இதுகுறித்து தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, போக்குவரத்துத் துறை ஆணையர் ராஜாராம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தீபாவளிப் பண்டிகையின்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் சில ஆம்னி பஸ் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பது ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்குவதையொட்டி, இந்த ஆண்டு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்காக, தனியார் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்துத் துறை ஆணையர் ராஜாராம் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
சென்னையில் இருந்து வெளிiருக்குச் செல்லும், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது.
இதுபோல், வேறு ஊர்களிலும், தீபாவளிப் பண்டிகையின்போது நியாயமான கட்டணத்தையே வசூலிக்கவேண்டும். அதி வேகமாக செல்லக் கூடாது. பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பஸ்களில் பட்டாசுகளையோ, தீப்பிடிக்கக்கூடிய வேறு பொருள்களையோ ஏற்றக் கூடாது. அதிக கூட்டத்தை ஏற்றக் கூடாது.
பெர்மிட், தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் ரசீது, வரி ரசீது மற்றும் புகை பரிசோதனை சான்று ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வாகனத்தை ஓட்டும்போது ஓட்டுனர்கள் மது குடித்திருக்கக் கூடாது.
ஒளியை பிரதிபலிக்கக்கூடிய சிவப்பு ரிப்ளெக்டர்களை வாகனத்தில் ஒட்டியிருக்க வேண்டும். வாகனத்தில் சரக்குகளை ஏற்றும்போது, கூட ஒருவர் வந்தால் மட்டுமே அதை அனுமதிக்க வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை, ஆம்னி பஸ் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, போக்குவரத்துத் துறை ஆணையர் வழங்கியுள்ளார். எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தொடர்ந்து ஆம்னி பஸ்களை கண்காணிக்க வேண்டும். அதனை பின்பற்றுவதாக அவர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.
பஸ் டிக்கெட்டினை அதிக விலைக்கு விற்கும் இடைத்தரகர்களை போலீசில் பிடித்துத் தரவேண்டும். நவம்பர் 1 முதல் 8-ந் தேதிவரை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசு இந்த உத்தரவோடு நின்று விடாமல் பறக்கும் படைகளை அமைத்து ஆம்னி பஸ்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications