சமரப் பேச்சில் உடன்பாடு-திருக்கோவில் பணியாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்ட கோவில் பணியாளர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட 38,000க்கும் மேற்பட்ட கோவில்களில் பணியாற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
அறுபடை வீடுகளில் அடங்கிய பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், சென்னை திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்பட பெரும்பாலான கோவில்களில் நேற்று காலையில் இருந்தே ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
இதனால் கோவில் டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டிருந்தன. கோவில் நிர்வாக அதிகாரிகளே டிக்கெட் வழங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டனர். இருப்பினும் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே போனால் அர்ச்சர்கள் இல்லாத நிலை.
இதனால் பக்தர்கள் சாமி கும்பிட முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலுக்கு வந்தும் சாமி கும்பிட வழி இல்லாமல் போனதால் பக்தர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.
இருப்பினும் சென்னையில் உள்ள முக்கியக் கோவில்களில் பிரச்சினை இல்லை.
இந்த பின்னணியில் நேற்று அறநிலையத்துறை ஆணையர் ப.ரா.சம்பத் முன்னிலையில், பேச்சு வார்த்தை நடைபெற்றது. கோவில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நல்லதம்பி, எ.தேவராசன், ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதில், இருசாராருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து மாலையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து
இந்து அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
முதல்வர் உத்தரவின்படி அரசுப்பணியாளர்களுக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளம் மற்றும் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதுபோல் கோவில் பணியாளர்களுக்கும் 23-7-2010 அன்று திருத்திய ஊதிய விகிதங்கள் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டது.
1988-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான், கோவில் பணியாளர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயக்குழு அமைத்து புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து வழங்கப்பட்டது.
அதேபோல் தற்போது 2010-ம் ஆண்டும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் கோவில் பணியாளர்களுக்கும் புதிய ஊதிய நிர்ணயக்குழு அமைத்து புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கோவில் ஊழியர்களுக்கு இப்புதிய ஊதிய நிர்ணயத்தால் தொடர் செலவினமாக 27 கோடியே 33 லட்சம் ரூபாயும், தொடரா செலவினமாக 82 கோடியே 49 லட்சம் ரூபாயும் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.
அரசால், திருக்கோவில் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பினர், அரசுப்பணியாளர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்தல் மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து, அக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, 20-10-2010 அன்று சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று கோவில்களில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே நேற்று அறநிலையத்துறை ஆணையர் முன்னிலையில் சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவர்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்ததன் அடிப்படையில், தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு பணிக்குத் திரும்புவதாக சங்க நிர்வாகிகள் ஆணையரிடம் உறுதியளித்து, போராட்டத்தை கைவிட்டனர் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications