ஒற்றுமையாக இருந்தால்தான் 100 ஜெயலலிதா வந்தாலும் வீழ்த்த முடியும்-கருணாநிதி

திமுக நிர்வாகிகளோடு முதல்வர் கருணாநிதி கலந்துரையாடலில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரம் ராமநாதபுரம், கோவை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். நேற்று தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அவர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
நீங்கள் எப்படி பணியாற்றப் போகிறீர்கள்? எப்படிக் குரல் கொடுத்திருக்கிறீர்கள்? எந்த வகையிலே உங்களுடைய பணி நிறைவடையப்போகிறது? என்பதை அறிந்து கொள்ளவும், அதற்கு யோசனைகளை சொல்லவும்தான் இந்த கலந்தாய்வுக்கூட்டத்தை நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு நான் சில முக்கியமானவர்களை கலந்தாலோசித்த போது எனக்கு கிடைத்துள்ள சில உண்மைகளை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது.
என்னதான் நீங்கள் இங்கே உறுதி எடுத்துக்கொண்டாலும், சபதம் மேற்கொண்டாலும் நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம் என்று சொன்னாலும் உங்களிடத்திலே உள்ள ஒற்றுமை கெட்டிப்படவில்லை என்றால் அந்த உறுதி மொழியை காப்பாற்ற முடியாது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது நான் ஒருவன் தான் தேர்தலிலே வெற்றி பெற முடிந்தது. மற்ற அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் நம்முடைய வேட்பாளர்கள், திமுக தலைமையிலேயிருந்து கூட்டணி வேட்பாளர்கள் தோற்றுப்போன நிலை இருந்தது.
அதை மறந்துவிடக்கூடாது. அந்த வீழ்ச்சிக்கு பிறகு இந்தக்கழகம் உருப்படுமா? இந்தக் கழகம் மீண்டும் எழுமா? எழுந்து மக்கள் பணி ஆற்றுமா? திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பெயர் நிலைத்திருக்குமா? என்றெல்லாம் உலக அளவிலே கேள்வி எழுந்த நேரத்தில் இன்றைக்கு உலகமே வியக்கத்தக்க அளவில் நாம் உயர்ந்து நிற்கிறோம்.
பிரிந்து நின்று குழு மனப்பான்மையை நீங்கள் அகற்றினால்தான்; இந்த கழகத்தினுடைய ஒற்றுமையை நிலை நாட்டினால்தான் எதிர்காலத்திலே தேர்தல்களிலே மாத்திரமல்ல; கழகம் ஒரு கொள்கைக் கூடாரம்; லட்சியக் கூடாரம் என்பதை எடுத்துக் காட்டுவதற்கும் நம்மால் முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் ஜெயலலிதா அல்ல; ஜெயலலிதாவோடு 100 பேர் அணி திரண்டு வந்தாலும் திமுகவை யாராலும் வெற்றி பெற முடியாது; யாராலும் வீழ்த்த முடியாது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications