உள்ளாட்சி தேர்தல் தோல்வி-அச்சுதானந்தன் பதவி விலக காங். வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கூட்டணி படு தோல்வியை சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் அச்சுதானந்தன் பதவி விலக வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கோரியுள்ளார்.
கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்ட 4 மாநகராட்சிகளில் 2 மாநகராட்சிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
59 நகர சபைகளில் 39-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 8 மாவட்ட பஞ்சாயத்துகளிலும், 89 ஒன்றியங்களிலும், 539 கிராம பஞ்சாயத்துகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல பாஜகவும் கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சென்னிதலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் ரமேஷ் சென்னிதலா நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த நான்கரை ஆண்டு கால இடதுசாரி முன்னணி அரசின் சாதனைகள், உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று முதல்வர் அச்சுதானந்தனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பினராய் விஜயனும் கூறினர். ஆனால் அதற்கு நேர்மாறாக படுதோல்வி அடைந்துள்ளது.
எனவே உடனடியாக அச்சுதானந்தன் பதவி விலக வேண்டும். தொடர்ந்து பதவியில் இருக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இடங்களில் பாஜக உதவியை நாங்கள் கோரமாட்டோம் என்றார்.