பெரிய தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்சாரம்! - தமிழக அரசு
சென்னை: பெரிய தொழிற்சாலைகளுக்கு மாலை நேரங்களில் இனி தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி தேவை மற்றும் மின் விநியோகம் குறித்து முதல்வர் கருணாநிதி 05.10.2010 அன்று ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, தற்போது நடைமுறையில் உள்ள- மின்சாரம் அதிகமாகப் பயன்படுத்தப்படக் கூடிய மாலை 6-00 மணி முதல் இரவு 10-00 மணி வரை உயரழுத்த தொழிற்சாலைகளுக்கு 10 விழுக்காட்டிற்கு மிகாமல் வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்காக மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்த நடைமுறையை மாற்றி, தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்கிடும் நோக்கில், மாலை நேரத்திலும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், பெரிய தொழிற்சாலைகள் மாலை நேரத்திலும் தடையின்றி மின்சாரத்தைப் பயன்படுத்திட, நம்பகக்கட்டணம் வாயிலாக தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கிட மின்சார வாரியத்திற்கு 19.10.2010 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, தமிழகத்திலுள்ள 5025 பெரிய தொழிற்சாலைகளில் விருப்பம் தெரிவித்த 1000 தொழிற்சாலைகளுக்கு மேற்படி நம்பகக் கட்டணத்தில் 300 மெகாவாட் மின்சாரம் ஒப்பந்தப்புள்ளி மூலம் கொள்முதல் செய்து, ஒரு யூனிட் ரூ.7.20-க்கு மிகாமல் -01.11.2010 முதல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.