தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்
ராமேஸ்வரம்: கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் வெறித் தாக்குதலைக் கண்டித்து கடந்த ஒரு மாதமாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்போது போராட்டத்தைக் கைவிட்டுள்ள அவர்கள் 650 விசைப் படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆனால் கச்சத்தீவு அறுகே அவர்களை மறித்து இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளனர். பின்னர் வேறு இடத்தில் மீன் பிடிக்க வலைகளை விரித்தபோது மீண்டும் இலங்கை கடற்படையினர் வந்து வலைகளை அறுத்தும், படகுகளை தாக்கி சேதப்படுத்தியும், மீன்களைப் பறித்தும் விரட்டியடித்தனர்.
இதனால் பெரும் சோகத்துடன் தமிழக மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். கடற்படையினரின் இந்த வெறிச் செயலால் இந்த தீபாவளி தங்களுக்கு துக்க தீபாவளியாக மாறியுள்ளதாக மீனவர்கள் பெரும் வேதனையுடன் கூறியுள்ளனர்.