லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மீது தேர்தல் விதி மீறல் வழக்கு
பாட்னா: ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி ஆகியோர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இன்று இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. திகா சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிக்கு தேர்தல் நடத்தை விதியை மீறி, தங்களது பாதுகாவலர்களுடன் உள்ளே போனதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இருவரும் வாக்களிக்க அங்கு சென்றபோதுதான் கூடவே பாதுகாவலர்களையும் வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து திகா தாலுகா வளர்ச்சிஅதிகாரி அசோக் குமார், பாட்னா விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இருவர் மீதும் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இதுகுறித்து திகா தொகுதி தேர்தல் அதிகாரி மக்சூத் ஆலம் கூறுகையில், விதிமுறைப்படி, வாக்குச் சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த விஐபியும் பாதுகாவலர்களை உடன் அழைத்துச் செல்லக் கூடாது என்றார்.
முன்னதாக வாக்களிப்பதற்காக லாலு, ராப்ரி, அவர்களது மகன் தேஜ் பிரதாப், மகள் ராகினி ஆகியோர் பாதுகாப்புப் படையினர் புடை சூழ அத்தனை விதிகளையும் காற்றில் பறக்க விட்டு தடபுடலாக வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வாக்களித்து விட்டு வந்தனர்.