கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு விஜயகாந்த்துக்கு முதிர்ச்சி இல்லை-நல்லகண்ணு
கோவை: மாற்று அணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு முதிர்ச்சி இல்லை என்று கூறியுள்ளார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக ஒரு அணி அமையும் என்பது நடக்க முடியாதது, சாத்தியமில்லாதது. குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் புதிய அணி அமையும் என்பதற்கு வாய்ப்பில்லை. காரணம், விஜயகாந்த்துக்கு மாற்று அணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லை.
அதேபோல காங்கிரஸ் பக்கம் அதிமுக சாய்வதாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. அது வெறும் யூகம்தான். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ள கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம்.
இந்த இரு தேசிய கட்சிகளிடமிருந்தும் சம தொலைவை நாங்கள் பராமரிக்கிறோம். பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ், நமது நாட்டின் இறையாண்மையை அமெரிக்கா சுரண்ட அனுமதிக்கிறது.
கர்நாடகத்திலிருந்து நமக்குரிய தண்ணீரைப் பெற திமுக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரிப் பிரச்சினை குறித்து திமுக அரசு மிகவும் குறைந்த அளவிலான ஆர்வத்தையே காட்டுகிறது என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications