மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானை டிஸ்மிஸ் செய்யக் கோரி ஆளுநரிடம் மனு
மும்பை: கார்கில் போர் வீரர்களுக்கான வீடு ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆளுநர் சங்கரநாராயணனிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரில் மனு அளித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான இந்தக் குழுவில் சிவசேனா கட்சித் தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கத்சே தலைமையில் ஆளுநரை சந்தித்து சவானை டிஸ்மிஸ் செய்யக் கோரினர்.
பின்னர் சிவசேனா தலைவர் திவாகர் ரவோத் கூறுகையில், உடனடியாக சவான் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநில அரசின் பெயரும், மகாராஷ்டிர மாநிலத்தின் பெயரும் கெட்டுப் போய் விட்டது. பச்சை ஊழலில் ஈடுபட்டுள்ள இவர்கள் இனியும் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று கூறினார்.
சவான் தலைமையிலான அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநரிடம் வலியுறுத்தியதாக பாஜக, சிவசேனா தலைவர்கள் தெரிவித்தனர்.