திருப்பூர் அருகே பொதுப்பாதையை தடுத்து கட்டப்பட்ட தீண்டாமை சுவர் அகற்றம்
திருப்பூர்: திருப்பூர் அருகே பொதுப்பாதையைத் தடுத்துக் கட்டப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரை காவல் துறை பாதுகாப்போடு வருவாய்த் துறையினர் அகற்றினர்.
சுல்தான்பேட்டை ஆதிதிராவிடர் காலனியில் 300 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த காலனியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா நகருக்குச் செல்லும் பாதையை மறைத்து தனியார் ஒருவர் தடுப்புச் சுவர் கட்டியிருக்கிறார். மேலும் இந்த பாதையையும் ஆக்கிரமித்து மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. இதற்கு தலித் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த சிலர், மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி மனுக் கொடுத்தனர்.
இதனையடுத்து, திருப்பூர் கோட்டாட்சியர் சொக்கன், வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் ஆகிய வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில், பொதுப்பாதையை மறைத்து தீண்டாமை சுவர் கட்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த சுவரை போலீசார் பாதுகாப்போடு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.