கர்நாடகம்: பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி- அமைச்சரவை விரிவாக்கம் ஒத்தி வைப்பு
பெங்களூர்: அமைச்சர் பதவி கேட்டு ஏராளமான பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து, இன்று நடைபெற இருந்த அமைச்சரவை விரிவாக்கத்தை முதல்வர் எதியூரப்பா திடீரென கைவிட்டுவிட்டார்.
எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 11 பாஜக எம்.எல்.ஏ.க்களும், 5 சுயேச்சைகளும் வாபஸ் பெற்றதை தொடர்ந்து தொடர்ந்து இந்த 16 பேரையும் பதவி நீக்கம் செய்து சபாநாயகர் போப்பையா உத்தரவிட்டார்.
இதில் பாலச்சந்திர ஜார்கிஹோளி, ஆனந்த் அஸ்னோடிகர், சுதாகர், நரேந்திரசாமி, வெங்கட ரமணப்பா, நரேந்திரசாமி ஆகிய அமைச்சர்களும் அடங்குவர். இந்த இடங்களை நிரப்ப அமைச்சரவையை விரிவாக்க எதியூரப்பா திட்டமிட்டார்.
முதல் கட்டமாக இன்று 4 அமைச்சர்களை நியமிக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவளித்த சுயேட்சை எம்.எல்.ஏ. வர்த்தூர் பிரகாஷ் மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட பாஜக எம்எல்ஏவான சி.டி.ரவிஸ மற்றும் சிவண்ணா, ராஜு கெளடா ஆகியோர் அமைச்சர்களாக நியமி்க்கப்படுவர் என்று தகவல் வெளியானது.
அமைச்சரவை விரிவாக்கம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் தகவல் துறை நேற்று மாலை வெளியிட்டது. அதில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தகவல் துறை இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது.
அமைச்சர் பதவி கேட்டு பல எம்எல்ஏக்களும் போர்க்கொடி உயர்த்தியதால் பாஜக தலைமை இந்த முடிவை எடு்த்துள்ளது.
அமைச்சர் பதவி கிடைக்காது என்பதால் அரசின் தலைமை கொறடா ஜீவராஜ் மற்றும் மாநில எல்லைப்பகுதி வளர்ச்சி ஆணையத் தலைவராக உள்ள சந்திரகாந்த் பெல்லத் ஆகிய இரு எம்எல்ஏக்களும் தாங்கள் வகித்து வந்த அந்தப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போல நாராயணசாமி, அப்பச்சு ரஞ்சன், கிருஷ்ணய்ய ஷெட்டி உள்ளிட்டோர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் தங்களது எம்.எல்.ஏ. பதவியையே ராஜினாமா செய்யப் போவதாகவும் பாஜக தலைமையை மிரட்டி வருகின்றனர்.
இதற்கிடையே அமைச்சர் பதவி ஏற்க தயாராக இருந்த சி.டி.ரவிக்கும், அமைச்சர் பதவி கிடைக்காத தலைமை கொறடாவுக்கும் நேற்று திடீரென வாக்குவாதமும் மோதலும் நடந்தது.
இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த எதியூரப்பாவும் பாஜக தலைமையும் அமைச்சரவை விரிவாக்கத்தை கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டனர்.
விரைவில் அமைச்சரவை மாற்றம்-எதியூரப்பா:
இந் நிலையில் விரைவில் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை. திட்டமிட்டபடி அமைச்சரவை மாற்றம் நடைபெறும். பெயர்களை இறுதி செய்வதில் மட்டுமே தாமதம் நிலவுகிறது. விரைவில் அமைச்சரவை மாற்ற தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
கட்சி மேலிடத் தலைவர்களுடன் விரைவில் அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கவுள்ளேன் என்றார்.