கூட்டணி பற்றி தொண்டர்களுக்கு கவலை வேண்டாம்: அன்புமணி
திருவள்ளூர்: பாமக தொண்டர்கள் கூட்டணி பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
திருவள்ளூரில் பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர், பாமக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதைப் பார்த்து மாற்றுக் கட்சியினர் பொறாமையிலும் கலக்கத்திலும் உள்ளனர்.
எங்களுக்கு பதவிகள் மீது விருப்பமில்லை. ஆனால் மாற்றுக் கட்சியினர் நமது சமுதாயத்துக்காக இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளுக்காகவும் போராடுவதில்லை. நமக்காக போராடவே நமக்கு பதவிகள் வேண்டும்.
தற்போது இளைஞர்கள் பலர் சினிமா மோகத்தில் நடிகர்களின் பின்னால் செல்கின்றனர். சினிமா வாழ்க்கை அல்ல, அது ஒரு பொழுதுபோக்கு என்பதை அவர்கள் உணர வேண்டும். சினிமா நடிகர்களை விட்டுவிட்டு சமுதாயத்துக்காக போராட வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பாமகவை தோற்கடித்தனர். ஆனால் எழுச்சியுள்ள இளைஞர்கள் உள்ளவரை பாமகவை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
பெரிய அளவில் மதுஒழிப்பு போராட்டம்-ராமதாஸ்:
கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், பல ஆண்டுகளுக்கு முன் வன்னியர் சமுதாயத்தினர் கல்வியில் மிகவும் பின் தங்கியிருந்தனர். 27 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம். இந்த ஒதுக்கீடு மூலம் ஆண்டுதோறும் 250 மாணவர்கள் மருத்துவ படிப்பிலும், 15,000 பேர் பொறியியல் படிப்பிலும் சேர்ந்து வருகின்றனர்.
இந்த இட ஒதுக்கீட்டைப் பெற பாமக நடத்திய போராட்டங்கள், தியாகங்களை இளைஞர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். போராட்டத்தில் இறந்த 21 மாணவர்களின் தியாகங்களையும் நினைவு கூற வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தப்பின் பெரிய அளவில் மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். தமிழகத்தில் 15 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் என்று பாமகவில் இணைகிறார்களோ அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்றார்.
கூட்டணி குறித்து கவலை வேண்டாம் என்றும், தேர்தலுக்குப் பின்னரே மது ஒழிப்புப் போராட்டம் என்றும் பாமக அறிவித்துள்ளதன் மூலம் திமுகவுடன் கூட்டணிக்கு அந்தக் கட்சி தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications