ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்: கடற்படை விசாரணை அறிக்கை தாக்கல்
டெல்லி: மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில் நடந்துள்ள ஊழல் குறித்த விசாரணை அறிக்கையையும், அதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளையும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கடற்படை சமர்பித்துள்ளது.
மும்பை கொலபாவில் கடற்படை அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்புகள் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்டன.
இதை ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் கட்டியது. முதலில் 6 தளங்களைக் கொண்டதாக இந்தக் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் அனைத்து விதிகளையும் மீறி 31 தளங்களைக் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன.
ஆனால், இதில் வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் பெரும் மோசடி நடந்துள்ளது. இந்தக் குடியிருப்புகளில் 104 வீடுகள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ராணுவத் தளபதிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இதில் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணின் மாமியார், மைத்துனி மற்றும் மைத்துனருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. சவாண் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது தான் 31 மாடிகள் கட்ட விதிகளை மீறி ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ. 70 லட்சம். ஆனால், இவை அடிமாட்டு விலைக்கு அதாவது ரூ. 6.5 லட்சத்துக்கு அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவரங்கள் வெளியே வந்ததையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பு அமைச்சகமும் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உயர்நிலை தலைவர்கள் கொண்ட குழுவும் விசாரித்து வருகிறது.
இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு அசோக் சவாணுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அவரிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சவாண் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்த இரு நாட்கள் மும்பையில் சுற்றுப் பயணம் செய்ய இருப்பதால், இதன் பிறகு சவாண் பதவி நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
மேலும் இது குறித்து விசாரிக்குமாறு கடற்படைக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந் நிலையில் வீடுகள் யார் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை ஒப்படைக்குமாறு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்துக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி கடற்கரை பகுதியில் இந்தக் குடியிருப்புகள் கட்டுப்பட்டுள்ளதால், இந்தக் கட்டிடத்தில் யாரும் குடியேற முடியாத வகையில் உத்தரவைப் பிறப்பிக்கப் போவதாகவும் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். தேவைப்பட்டால் இந்தக் 31 மாடிக் கட்டதத்தை இடிக்கவும் உத்தரவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications