இருவர் கடத்தல்.. ரூ.1 கோடி தராததால் விரல்களை துண்டித்து அனுப்பிய கும்பல்

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே பதேபூர் சிக்ரி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அனில்குமார். இவரது உறவினர்கள் ரஜத், கெளரவ் ஆகியோர். இவர்கள் கடந்த மாதம் 15ம் தேதி ஜீப்பில் வந்த கும்பலால் கடத்தப்பட்டனர்.
இவர்களை விடுவிக்க அந்தக் கும்பல் அனில் குமாரிடம் ரூ.1 கோடி கேட்டு தொலைபேசியில் மிரட்டியது. ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் ரூ.25 லட்சம் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை அந்தக் கும்பல் ஏற்கவில்லை. இதையடுத்து இது குறித்து அனில்குமார் போலீசில் புகார் செய்தார். போலீசார் கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந் நிலையில் அனில் குமாருக்கு மீண்டும் கடத்தல்காரர்களிடம் இருந்து தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர், உனக்கு தீபாவளி பரிசு அனுப்பியுள்ளோம். சுடுகாடு அருகே கிடக்கும் அந்த பார்சலை எடுத்துக் கொள் என்றான்.
அனில்குமார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பார்சல் கிடந்தது. அதில் துண்டிக்கப்பட்ட 4 விரல்கள் இருந்தன.
கடத்தப்பட்ட இருவரின் விரல்கள் அவை என்று தெரிகிறது.
இருப்பினும் அவை பரிசோதனைக்காக சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடத்தல்காரர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்தர குர்ஜார் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications