தீபாவளி: பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் சுமார் 2,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் தனியார் மற்றும் அரசு விரைவுப் பேருந்துகளில் பல வாரங்களுக்கு முன்பே முன்பதிவு முடிந்து விட்டது.
இதையடுத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் மற்றும் பல்வேறு போக்குவரத்து கழகங்களும் தீபாவளிக்காக 1,000 சிறப்புப் பேருந்துகளை இயக்குகின்றன.
இந்தப் பேருந்துகளில் பயணிக்க முன்னதாகவே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனை வாங்க சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில், திருச்சி, சேலம் போன்ற நீண்ட தூரம் உள்ள ஊர்களுக்குச் செல்லும் பஸ்களில் ஏற பயணிகள் கூட்டம் அலை மோதியது. நேற்று மாலை முதல் விடிய விடிய பஸ் நிலையம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதே போல இன்றும் பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது.
இதே நிலை தான் ரயில்களிலும் காணப்படுகிறது. முன் பதிவு இடங்கள் எல்லாம் 3 மாதங்களுக்கு நிறைந்துவிட்ட நிலையில், சிறப்பு ரயில்களிலும் அறிவிக்கப்பட்ட நாளிலேயே இடங்கள் அனைத்தும் நிறைந்துவிட்டன.
இதனால் முன் பதிவு செய்யாத பெட்டிகளில் இடம் பிடிக்க நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் ரயில் நிலையத்தில் அலை மோதியது.
இதை சாக்காக வைத்து தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணத்தை பல மடங்காக உயர்த்திவிட்டனர்.
பட்டாசு கொண்டு செல்ல தடை:
இதற்கிடையே பட்டாசுகளை பஸ், ரயில்களில் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் சோதனை நடந்து வருகிறது.