சிவகாசியில் கடைசி நேரத்தில் பட்டாசுக்கு கடும் கிராக்கி
சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள், இந்தியாவில் 90 சதவிகித தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு விற்பனையும், உற்பத்தியும் அதிகரித்தாலும் இந்த ஆண்டு துவக்கத்தில் பட்டாசு விற்பனையில் மந்த நிலை இருந்தது.
ஆகஸ்ட் மாத ஆப் சீசன் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளின் வருகையும் குறைவாக இருந்தது. பிற மாநிலங்களில் நிலவிய நக்சலைட் பிரச்சனை, காமன்வெல்த் போட்டிகள், சில மாநில குடோன்களில் அதிகளவு பட்டாசு இருப்பு வைக்க முடியாத சூழலால் பட்டாசு விலை சில மாதம் மந்தமாகி உற்பத்தியில் தேக்க நிலை இருந்தது.
அனுமதி இல்லாத பட்டாசு தயாரிப்பை அழிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் எட்டு பேர் பலியானது, ஆலைகளுக்கு நெருக்கடியை தந்தது. தொழிற்சாலை ஆய்வக துறையினர் பாதுகாப்பு விதிகளை காரணம் கூறி ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் கடந்த ஒரு வாரம் முன்பு வரை பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்தினர். 593 ஆலைகளை ஆய்வு செய்ததில் விதிகளை மீறிய 50 ஆலைகளை நிரந்தரமாக மூடவும், 205 ஆலைகளில் குறைகளை நிவர்த்தி செய்ய மூன்று நாட்கள் தற்காலிக உற்பத்தி தடையும் விதித்தனர்.
இதனால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டன. ஆனால் ஆலைகளால் அதிக தயாரிப்பில் ஈடுபடமுடியவில்லை. கடந்த ஒரு வாரமாக மழை மற்றும் ஈரப்பதமான சீதோஷண நிலையால் கடைசி நேர பட்டாசு தயாரிப்பு முடங்கியது. இக்காரணங்களால் 5 முதல் 10 சதவிகித உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடைகளுக்கு தேவையான சரக்கு வழங்க முடியவில்லை. கடைசி நாட்களில் பட்டாசு தட்டுபாடு ஏற்பட்டு விலையும் உயர்ந்தது.