கருணாநிதியுடன் ப.சிதம்பரம் சந்திப்பு: கூட்டணி, இலங்கை தமிழர்கள் குறித்து ஆலோசனை
கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தின் நடந்த இச் சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர்கள் மீள் குடியேற்றப் பிரச்சனை ஆகியவை குறித்து இருவரும் பேசினர்.
மேலும் தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம் குறித்தும் இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
பின்னர் நிருபர்களை சந்தித்தார் சிதம்பரம். அவரது பேட்டி:
கேள்வி: முதலமைச்சரை சந்தித்த தில் ஏதேனும் விசேஷம் உண்டா?
ப.சிதம்பரம்: விசேஷம் ஏது மில்லை. தீபாவளிதான் விசேஷம். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்பு. அதே நேரத்தில் கடந்த முறை முதல்வரை நான் சந்தித்து விட்டுச் சென்ற பிறகு இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்திருந்தார்.
அவரோடு பேசிய செய்திகளைப் பரிமாறிக்கொண்டேன். வாழ்விடத்திலிருந்து இடம் பெயர்ந்த 50,000 பேருக்கு வீடு கட்டித் தரவேண்டும் என்ற திட்டம் முன்றேற்த்தில் இருக்கிறது. விரைவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம். மழைக்காலம் முடிந்த பிறகு வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி தந்திருக்கிறார்கள். அது போன்ற பொதுவான விஷயங்களைப் பரிமாறிக் கொண்டோமே தவிர வேறேதும் விசேஷம் இல்லை.
கேள்வி: இலங்கை கடற்படையால் இந்திய மீனவ்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே?
சிதம்பரம்: எனது நினைவின்படி 2010ல் ஒரு தமிழ் மீனவர் உயிரிழந்திருக்கிறார். 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அது தவிர புதிதாக யாராவது கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது என்றார்.
இச் சந்திப்பின்போது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் நிலவும் சிக்கல்கள், இளங்கோவன் மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் ஆகியோர் கூட்டணிக்கு ஏற்படுத்தி வரும் பிரச்சனைகள் ஆகியவை குறித்து திமுக தரப்பு கவலை தெரிவித்ததாகத் தெரிகிறது.
காங்கிரசில் இணையும் ராமதாஸ் தம்பி மகன்:
இந் நிலையில் ப.சிதம்பரம் முன்னிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தம்பி மகன் காங்கிரசில் இணைகிறார்.
ராமதாசின் தம்பி மகன் சந்திரசேகரன் நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் இணைகிறார்.
அதே போல நடிகர் எஸ்.வி.சேகரும் விரைவில் காங்கிரசில் இணையவுள்ளார்.