பெருமளவில் நீர் திறப்பால் காவிரியில் வெள்ள அபாயம்-கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை
தர்மபுரி: கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளிலிருந்து பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரங்களில் வசிப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகத்தின் கிருஷ்ணராசாகர், கபிணி உள்ளிட்ட அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் பெருமளவில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
ஆற்றில் யாரும் மீன்பிடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஓகனேக்கல், கூத்தப்பாடி, ஒத்தமலை ஆகிய பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேட்டூருக்கு விநாடிக்கு 50,000 கன அடி நீர் வருகை
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியைத் தாண்டி வரத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84.81 அடியாக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்தது.
தற்போது அணைக்கு விநாடிக்கு 50,000 கன அடிகளைத் தாண்டி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications