காங்கிரஸில் இணைந்தார் டாக்டர் ராமதாஸின் தம்பி மகன் சந்திரசேகரன்
சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தம்பி மகன் சந்திரசேகரன் தனது ஆதரவாளர்களோடு இன்று ப.சிதம்பரம் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் சீனு கவுண்டர். இவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சொந்த தம்பி ஆவார். இவரது மகன் சந்திரசேகரன். இவர்கள் இருவரும் தங்களது ஆதரவாளர்களான 11 ஊராட்சித் தலைவர்கள், மூன்று ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோருடன் நேற்று ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொண்டனர்.
பாமகவில் தன்னையும், தனது தந்தையையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதால், தாங்கள் காங்கிரஸில் இணையப் போவதாக சந்திரசேகரன் சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களில் முக்கியமானவருமான ப.சிதம்பரத்தின் முன்னிலையில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்கள் ராமதாஸின் தம்பியும், தம்பி மகனும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுஸ உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர். அனைவரையும் ப.சிதம்பரம் வரவேற்றார். பின்னர் அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தீபாவளி பரிசாக சீனுகவுண்டரும், சந்திரசேகரனும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் இணைந்துள்ளனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
நாட்டில் காலங்காலமாக பின்தங்கிய சமுதாயத்தினர், ஆதிதிராவிட சமுதாயத்தினர் சமுதாய கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.கடந்த மூன்று மாதங்களாக காங்கிரஸ் கட்சிக்கு வரவு அதிகம். செலவு எதுவும் இல்லை.
ஆயிரமாயிரம் பேர் காங்கிரசில் இணைகின்றனர். யாரும் வெளியே செல்லவில்லை. இதற்கு காரணம் சோனியா, மன்மோகன் சிங், ராகுல் தலைமை தான் என்பதை மறந்து விட முடியாது.
கடந்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டியது காங்கிரஸ் கட்சி; இந்த தலைமுறையினருக்கும் அடையாளம் காட்டுகிறது காங்கிரஸ் கட்சி; அடுத்த தலைமுறையினருக்கும் சக்தி படைத்த காங்கிரஸ் கட்சி தான் அடையாளம் காட்டும். அந்த நம்பிக்கையில் தான் செல்வபெருந்தகை, திருநாவுக்கரசர், சீனுகவுண்டர் போன்றவர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
இந்திய வரலாற்றில் மூன்று முக்கிய மைல்கல்கள் உள்ளன. முதல் மைல் கல்லாக 1951ம் ஆண்டு நேரு பிரதமராகவும், காமராஜர் முதல்வராகவும் இருந்த போது தான் பள்ளி, கல்லூரிகளில் பின்தங்கிய சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை மறுத்து அரசியல் சாசனம் திருத்தி அமைக்கப்பட்டது.
இரண்டாவது மைல் கல் மண்டல் கமிஷன் அறிக்கை. அந்த அறிக்கையை வி.பி.சிங் அமல்படுத்தினார் என்பது வரலாற்றுப் பிழை. அவர் மண்டல் கமிஷன் அறிக்கையை அறிவிக்கத்தான் செய்தார்.
ஆனால், நரசிம்மராவ் பிரதமராகவும், சமூக நலத்துறை அமைச்சராக சீதாராம்கேசரியும், இணை அமைச்சராக தங்கபாலுவும் பணியாற்றிய போது தான் அனைத்து கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
1993, 94 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தான் மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டு மத்திய அரசு இடஒதுக்கீடு கொண்டு வந்தது. மூன்றாவது மைல் கல்லாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் உயர்கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய மக்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
பின்தங்கிய சமுதாய மக்களும், ஆதிதிராவிட மக்களும் அதிகாரத்தை பெறுங்கள்; எடுத்துக் கொள்ளுங்கள்; செம்மையாக பயன்படுத்துங்கள். அதிகாரம் பெறும் காலம் பின்தங்கிய சமுதாய மக்களுக்கும், ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கும் நிச்சயம் வரும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications