சவூதியில் இந்திய கொத்தனார் மர்மசாவு-உடலை கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை
திங்கள்சந்தை: சவுதியில் வேலை பார்த்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் மர்மமாக இறந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
குமரி மாவட்டம் மண்டைகாடு அருகே காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். கொத்தனார். அவரது மனைவி தங்கம். மகாலிங்கம் சவூதி அரேபியாவில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி மகாலிங்கம் சவுதி அரேபியாவில் உள்ள சுமிசி சிறையி்ல் இறந்து விட்டார் என அவரது மனைவிக்கு தகவல் வந்தது.
இதைக் கேட்டு அதி்ர்ச்சி அடைந்த அவர் மர்மமான முறையில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். 20 நாட்கள் ஆகியும் மகாலிங்கத்தின் உடல் கொண்டு வரப்படாததால் இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.