தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது-அஞ்சலிக்குப் பின் ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டம் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய சட்டமன்ற கட்டிடத்தில் இன்று இரண்டாவது முறையாக சட்டசபை கூடியது.
முன்னதாக புதிய கட்டிடத்தில் சட்டசபை முதன் முதலாக கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி கூடியது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மார்ச் 26-ம் தேதி மீண்டும் கூடிய சட்டசபை வெறும் 20 நிமிடம் தான் நடந்தது. மறுபடியும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தொடங்கிய சட்டசபை மே மாதம் 14-ம் தேதி வரை மொத்தம் 36 நாட்கள் நடந்தது.
மே 14-ம் தேதி நடந்த கூட்டத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் மறுதேதி குறிப்பிடமால் ஒத்திவைத்தார். இதையடுத்து 177 நாட்களுக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
சட்டசபை துவங்கியதும் அன்மையில் மறைந்த டி.சுதர்சனம் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மறைந்த உறுப்பினர்களுக்கு அனைவரும் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அவரது அறையில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் கூடியது. இதில் எத்தனை நாட்களுக்கு கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தயாராக உள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கடத்தல், சேலம் படுகொலைகள் உள்ளிட்டவற்றை அதிமுக முக்கியமாக எழுப்பும் எனத் தெரிகிறது.
அதேபோல விலைவாசி உயர்வு, மின்தடை உள்ளிட்டவற்றை கையில் எடுக்க கம்யூனிஸ்டுகள் தயாராகி வருகின்றன.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 4 முக்கிய அவசர சட்டங்களுக்கான சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
சென்னையில் அங்கீகாரம் இல்லாத கட்டிடங்களை இடிப்பதற்கு மேலும் ஒரு ஆண்டுக்கு தடை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் 2-வது சட்டத்திருத்தம், தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம், நகராட்சி பகுதிகளில் சொத்துவரிகளை பரிமாற்றம் செய்வதற்கான வரிவிதிப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் ஆகியவற்றுக்கான மசோதாக்கள் இந்த தொடரில் நிறைவேற்றப்படவுள்ளன.