ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்.குக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது: வைகோ
நெல்லை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவுக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கும் கூட தொடர்பு இருக்கலாமோ என்று சந்தேகம் வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தி.மு.க. குடும்ப அரசியலுக்கு எதிராக தமிழகத்தில் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி வலுவாக உள்ளது. கருணாநிதி தலைமையிலான அரசை மாற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள். பாலாறு, காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்துக்கு கருணாநிதி துரோகம் செய்து விட்டார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தயங்குகிறார். இதனால் காங்கிரஸுக்கும் இதில் பங்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னரும், அவர் மீது நடவடிக்கை எடுக்க மன்மோகன் சிங் முன்வரவில்லை. இதனால்தான் சந்தேகம் வருகிறது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் வீடு திரும்புவார்களா என்ற சந்தேகம் பெற்றோருக்கு ஏற்படுகிறது.
சிறு தங்க நகைக்காககூட வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அக் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். காங்கிரஸ் - தி.மு.க. உறவு தொடர்பாக இளங்கோவன் எழுப்பிய கேள்விக்கு கருணாநிதி பதில் கூறவில்லை. வழக்கமாக இளங்கோவன் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறும் கருணாநிதி, தற்போது பெட்டி பாம்பாக அடங்கியுள்ளார்.
இலங்கை ராணுவத்தினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உண்மைக்கு மாறான தகவல்களைத் தருகிறார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்தும் தாக்குல் தொடர்கிறது. மீனவர்களின் வலைகள் கிழிக்கப்படுகின்றன, படகுகள் தகர்க்கப்படுகின்றன. மீனவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறினார் வைகோ.












Click it and Unblock the Notifications