ராமதாஸ் தம்பியை காங்.கில் சேர்த்த மாஜி எம்.எல்.ஏவை சரமாரியாக வெட்டிய 3 பாமகவினர் கைது
சென்னை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தம்பியையும், தம்பி மகனையும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க உதவியதற்காக நேற்று 10 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலராமன் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக 3 பாமக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கும்பலில் இடம் பெற்றிருந்த மேலும் 7 பேர் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்கள்.
சென்னை பூங்காநகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் நேற்று தண்டையார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சரமாரியாக வெட்டப்பட்டார். அவரது உதவியாளர் செல்லப்பனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெட்டுப்பட்ட இரண்டு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலராமன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தி படு வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து காங்கிரஸார் அப்பல்லோ முன்பு குவிந்தனர். அந்தப் பகுதியில்சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பலராமனை வெட்டிய கும்பலைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், வட சென்னை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் சத்யா, பகுதி துணை செயலாளர் ஹரிக்குமார், வட சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர் சசிக்குமார் ஆகியோர் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
ராமதாஸ் தம்பியையும், அவரது மகனையும் காங்கிரஸில் சேர்த்ததால்தான் பலராமனை வெட்டியதாக கைதான 3 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனராம்.
இவர்களைப் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த 7 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
பலராமன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டப்பேரவையின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் உ.பலராமன் நேற்று காலை சில சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் தண்டையார்பேட்டையிலுள்ள அவரது வீட்டிற்குள் பத்து, பதினைந்து பேர் நுழைந்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கொலைவெறியுடன் அவரை தாக்கி ரத்த வெள்ளத்தில் வீழ்த்திவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications