'ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்'..ஜெவை மறைமுகமாகத் தாக்கிய துரைமுருகன்
சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியபோது அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை தனது 'ஸ்டைலில்' சமாளித்தார் துரைமுருகன்
அவர் கூறுகையில், நீதிமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் போட வேண்டும், அவர்களை விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். அதை திரும்பவும் வலியுறுத்துவோம். நீதிபதிகள்தான் நமக்கு ஆணை போடுகிறார்களே தவிர நாம் ஆணை பிறப்பிப்பது இல்லை.
தலைமை நீதிபதியை வரும் 2 நாட்களில் சந்தித்துப் பேசும்போது உறுப்பினர்களின் கருத்தை வலியுறுத்துவேன். 14 வருடமாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக உறுப்பினர் கூறினார். நிறைய கோர்ட்டுகளை உருவாக்கியும் சில நேரங்களில் வழக்குகள் தேங்குகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் கூட 'ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்' என கூறிவிட்டு 2 வருடம் கழித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதுவும் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு அரசு நிலத்தை வாங்குவது தவறு இல்லை என்று தீர்ப்பு கூறியிருக்கிறார்கள் (ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கிய வழக்கில் ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளைக்கு முன் நீதிபதி தந்த தீர்ப்பு). பல வழக்குகள் இப்படித் தான் உள்ளன.
அப்போது அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
சபாநாயகர்: நீங்கள் ஏன் எழுந்திருக்கிறீர்கள். உங்களை அவர் குறிப்பிட்டு ஏதும் சொல்லவில்லையே?.
(மீண்டும் எழுந்து பன்னீர்செல்வம் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தார்)
சபாநாயகர்: தீர்ப்பு காலதாமதம் குறித்து சொன்னதைகு நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?.
அமைச்சர் துரைமுருகன்: எனக்குத் தெரிந்த வகையில் நான் குறிப்பிட்ட இந்த தீர்ப்பு பீகாரில் நடந்த ஒரு வழக்கு என்று நினைக்கிறேன் (அதிமுகவினரைத் தவிர மற்ற அனைத்து எம்எல்ஏக்களும் சிரித்தனர், அதிமுகவினர் துரைமுருகனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்).
தொடர்ந்து பேசிய துரைமுருகன், நான் அவர்கள் (அதிமுக) பக்கம் பார்க்காமல் தான் பேசினேன். எதற்காக அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.