ஜாமீன் நீட்டிப்பு: ராமலிங்க ராஜு மனு நிராகரிப்பு
டெல்லி: ரூ 14 ஆயிரம் கோடி சத்யம் கம்யூட்டர்ஸ் மோசடி வழக்கில் ஆஜராக அவகாசம் கேட்டு ராமலிங்க ராஜு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்.
14 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார் சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு. இந்த வழக்கில் அவரது சகோதரர் ராமராஜு உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி உத்தரவிட்டது.
ராமலிங்க ராஜு உள்ளிட்ட 5 பேரும் நவம்பர் 10ஆம் தேதிக்குள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாகவும், குடும்ப பிரச்சனை காரணமாகவும் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் நேரில் ஆஜராக கால அவகாசம் அளிக்கக் கோரி ராமலிங்க ராஜு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமலிங்க ராஜுவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன், புதன்கிழமை மாலைக்குள் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.