நடிகர்கள் ஒருநாளாவது தமிழக இளைஞர்கள் குறித்து சிந்தித்திருப்பார்களா? அன்புமணி
காஞ்சிபுரம்: நடிகர்கள் பின்னால்தான் இன்றைய இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த இளைஞர்கள் குறித்து ஒரு நாளாவது இந்த நடிகர்கள் சிந்தித்திருப்பார்களா என்றுகேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.
பென்னாகரம் பார்முலாவின் அடிப்படையில் 100 தொகுதிகளைத் தேர்வு செய்து ஒவ்வொரு தொகுதியாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும் போய்க் கொண்டுள்ளனர்.
வன்னியர்கள் மொத்தமாக பாமகவுக்கே ஓட்டுப் போட வேண்டும். அவர்கள் ஓட்டுப் போடாததால்தான் நான் போயஸ் கார்டனுக்கும், கோபாலபுரத்திற்கும் மாறி மாறி அலைய நேரிடுகிறது என்று புலம்பியபடி பேசி வருகிறார் டாக்டர் ராமதாஸ். மேலும், வன்னிய வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் வகையிலும் அவர் பேசி வருகிறார்.
அந்தவகையில், காஞ்சிபுரம் தொகுதி பாமக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதிலும் ராமதாஸும், அன்புமணியும் கலந்து கொண்டனர்.
அன்புமணி பேசுகையில், பாமக வன்னியர் கட்சி, ஜாதிக் கட்சி என பத்திரிகைகள், ஊடங்கள், மாற்றுக் கட்சிக்காரர்கள் கொச்சை படுத்துக்கின்றன. பாமக சாதிக் கட்சி அல்ல. சாதிக்கக் கூடிய கட்சி பாமக. சமூக நீதிக்காக போராடக் கூடிய கட்சி பாமக.
அனைத்துக் சமூக மக்களுக்காகவும் போராடி வரும் கட்சி பாமகதான். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் போல் பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது.
இன்றைக்கு தமிழகத்தில் இளைஞர்கள் எல்லாம் நடிகர்கள் பின்னால்தான் ஓடுகின்றனர். ஆனால் இந்த இளைஞர்கள் குறித்தும், அவர்களது எதிர்காலம் குறித்தும், நலன் குறித்தும் எந்த நடிகராவது ஒரு நாளாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா? என்றார் அன்புமணி.
முன்னதாக டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
விடுதலை பெற்று 63 ஆண்டுகள் ஆகியும் பிற்படுத்தப்பட்டோர் போதுமான வளர்ச்சி அடையவில்லை. கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத்தர போராடிய ஒரே கட்சி பாமகதான். ஆனால் இதுவரை வன்னியர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ முதலமைச்சராக வரமுடியவில்லை. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
அனைவரும் படிக்க வேண்டும். அனைத்துப் படிப்புகளும் இலவசமாகவும், தரமாகவும் படிக்க வேண்டும். எந்த படிப்பு படிக்க வேண்டும் என்று ஒரு பிள்ளை நினைக்கிறானோ, அந்தப் படிப்பு முடியும்வரை ஒரு பைசா கூட செலவு செய்யாமல் படிக்க வைக்க திட்டங்கள் போட்டுள்ளோம். இதுவரை தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் இதுபோன்ற திட்டங்கள் போடவில்லை. சமச்சீர் கல்விக்கு திட்டங்கள் நாங்கள்தான் போட்டோம் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications