இலங்கை கடற்படை அட்டூழியம்: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்களைத் தாக்கி, அவர்கள் படகுகளையும் சேதப்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 20 படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளுக்குள் வந்தனர். மீனவர்களைத் தாக்கியதோடில்லாமல் அவர்கள் வைத்திருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களைச் சேதப்படுத்தினர். அவர்களின் படகுகளையும் சேதப்படுத்தி அவர்களை கரைக்கு விரட்டியடித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மாநில மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதில் தாக்கப்பட்டதால் ஒவ்வொருவரின் படகுக்கும் ரூ. 30,000 அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது இந்த மாதத்தில் நடந்துள்ள 3-வது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.