ராமநாதபுரத்திற்கு 2 குழந்தைகளுடன் வந்த மலேசியப் பெண் கடத்தப்பட்டதாக பரபரப்பு
ராநாதபுரம் ராமநாதபுரத்திற்கு தனது 2 குழந்தைகளுடன் வந்த மலேசியப் பெண் திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் அதிலா பானு (24). இவருக்கு முகம்மது அஸ்லம் (7) என்ற மகனும், அஜீரா பானு (5) என்ற மகளும் உள்ளனர். இவரது பூர்வீகம் ராமநாதபுரமாகும். தற்போது மலேசிய குடி்யுரிமையுடன் அங்கு வசித்து வருகிறார்.
அதிலா பானு தனது குழந்தைகளுடன் ராமநாதபுரம் வந்திருந்தார். பாரதிநகரில் அவரது வீடு உள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று காஸ் சிலிண்டர் தீர்ந்து போனதால் அருகில் உள்ள கடைக்கு தனது குழந்தைகளுடன் போயுள்ளார் அதிலா பானு. அதன் பிறகு அவர்களைக் காணவில்லை.
இதுகுறித்து அதிலா பானுவின் தாயார் சைபுன்னிசா (56) போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் காணாமல் போனதாக கூறப்படும் மூன்று பேருமே மலேசிய குடியுரிமை பெற்றவர்கள். அதிலா பானுவின் கணவர் மலேசியாவில் உள்ளார். உறவினர்கள் சிலரின் துணையுடன் அதிலா பானு மற்றும் அவரது குழந்தைகளைத் தேடி வருகிறோம்.
அவரது செலபோனுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்து விசாரித்துள்ளோம். இருப்பினும் மூன்று பேரும் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து துப்பு கிடைக்கவில்லை.
மூன்று பேரும் கடத்தப்பட்டு விட்டனரா என்ற கோணத்தில் தற்போது போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications